Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது பிரச்சனை அல்ல என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்கப் போகிறேனா என்றெல்லாம் பேசுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் சகாயம் விரைவில் தவெகவில் இணைவாரா என்ற பேச்சுகள் எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபைத் தேர்தலுக்கு பின் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய், அதன்பின் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்தி இடைத்தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

இருப்பினும் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பாக போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அரசியலுக்கு வருவதாக கூறிய ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டார்.
இதனால் திருச்சி கிழக்கில் தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, சகாயம் ஐஏஎஸ் உள்ளிட்டோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டத்தில் சகாயம் ஐஏஎஸ் பங்கேற்றார்.
அப்போது சகாயம் பேசுகையில், சகாயம் திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்கப் போகிறார் என்று பேசுகிறார்கள்.. நான் திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்கப் போகிறேனா என்பது பிரச்சனை அல்ல.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தொகுதி ஒன்றில் நீ வெற்றி பெறப் போகிறாயா என்பதுதான் பிரச்சனை.. என்னுடைய வெற்றியை பற்றியெல்லாம் நீ கவலைப்படுகிறாய்.. நான் எந்த தொகுதி என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.