அவருக்கு நீதியைத் தேடித்தரத் துடிப்போடு களமாடும் இளம் வழக்குரைஞராக நிமிஷா சஜயனின் வாதங்கள் கதை நகர்வுக்குக் கைகொடுத்திருக்கின்றன. மோகன் ராமின் அதீத நடிப்பு இடைஞ்சல் கொடுத்தாலும் தேவையான வெறுப்பைச் சம்பாதிக்கிறார். எக்கச்சக்க துணை கதாபாத்திரங்களுக்கு இடையே விஜயலட்சுமி வீரமணி, கவிதாலயா கிருஷ்ணன், நிழல்கள் ரவி, சுவாமிநாதன் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

கடல்சார் தொழிலாளர்களின் வறுமை சூழ்ந்த வீடுகள், ஊர் போன்றவற்றில் எதார்த்தத்தையும், நீதிமன்றக் காட்சிகளில் பரபரப்பையும் கொண்டு வந்திருக்கிறது அல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவு.
தெளிவில்லாமல் ஓடும் இரண்டாம் பாதியில் நிதானத்தைத் தொலைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங். ‘கடலாடும் சீமையிலே’ பாடலில் முணுமுணுக்க வைக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பின்னணி இசையில் ஆங்காங்கே மட்டும் பரபரப்பிற்குக் கைகொடுத்திருக்கிறார்.
சாதாரண நகை வழக்காகத் தொடங்கும் திரைப்படம், அரசின் அமைப்பு, நீதித்துறையின் செயல்பாடுகள், புதையல் சட்டம், கடல்சார் தொழில்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் எனப் பல கட்டங்களுக்கு நீள்கிறது.
தவசியின் குடும்பம், அவரின் கடல்சார் தொழில், அவர்களின் உலகம் என நிதானமாகவும், எளிமையாகவும் தொடங்கும் திரைக்கதை, காவல் நிலையப் படிகளைத் தவசி ஏறியதும், பரபரப்போடு மையக்கதையை நோக்கி நகர்கிறது.