எமனை அழவைத்த இமயம்!
பதினாறு வயது நாயகன்நீ!
பக்குவப் படங்கள் பலவற்றை
பாரினில் விதைத்த தூயவன்நீ!
தூல உடம்பே மரணிக்கும்உன்
துயரம் போக்கி நிகழ்விக்கும்!
அடைபட்டுக் கிடந்த படப்பிடிப்பை
அண்டவெளிக்குக் கொணர்ந்தவன் நீ!
அடிமட்ட மக்களின் உணர்ச்சிகளை
அழகாய்த் திரையில் கொடுத்தவன்நீ!
சப்பாணி என்றும் நிலைத்திருப்பான்
சரித்திரம்தனையே கடந்து நிற்பான்!
புதியவேதம் படைத்தே நீயும்
புதுமைக் கருத்துக்களைத் தூவிவிட்டாய்!
“பாலுத்தேவன் என்பது நீங்கள்
படித்து வாங்கிய பட்டமா”வென்று
பாலகன் கேட்பது மனதிலென்றும்
பசுமரத் தாணியாய் நின்றவொன்று!
ஓயாத அலைகள் ஓலமிட்டு
உந்தன்பெயரைக் கூவி நிற்கும்!
தாலியுமின்றி சிலுவையும் விடுத்து
தரணியில் நாங்கள் மனிதராகவே
வாழ்ந்தால் போதும் என்றகாதல்
வரலாற்றில் என்றும் நிலைத்தவொன்று!
மரியாதை என்பது திறமைக்கு
மகுடம் சூட்டும் பண்பாகும்!