International
oi-Mani Singh S
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – சீனா இடையேயான எல்லை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றதாக பாகிஸ்தான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில், எல்லை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லை பிரச்சினையில் தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என பாகிஸ்தான் கூறி அத்துமீறி வருகிறது. அதேபோல, அருணாசலபிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் சீனா, எல்லையை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகளை உருவாக்கியும் வருகிறது.

பாகிஸ்தான் சீனா
அவ்வப்பொது இந்தியாவை சீண்டும் விதமாக இந்திய பகுதிகளை உள்ளடக்கியபடி வரைபடம் வெளியிட்டும் அடாவடி செய்து வருகிறது. இந்த நிலையில்தான், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் – சீனா எல்லை கூட்டு ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆணையம் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை ஒத்துழைப்பு, கூட்டு எல்லை ஆய்வுகள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தும் என பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த பதிவினை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. அந்த பதிவுடன் இருநாட்டு அதிகாரிகள் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது:- “எல்லை ஆணையத்தின் முதல் கூட்டம் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது.
இந்தியா கண்டனம்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் துணை தலைமை இயக்குனர் லி யா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் சீன விவகாரங்களுக்கான தலைமை இயக்குனர் பிலால் முகமது சவுத்ரி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்” என்று கூறியிருந்தது.
பாகிஸ்தான் இந்த பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களில் இந்தியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை உள்ளடக்கிய சட்டப்பூர்வமான எல்லை எதுவும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாடகம் செய்யாதீர்கள்
“ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகளாக எப்போதும் இருக்கும். சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய பகுதிகள் தொடர்பாக எந்தவித ஏற்பாட்டையும் மேற்கொள்ள அந்த நாட்டிற்கு உரிமை இல்லை. 1963 ஆம் ஆண்டு சீனா-பாகிஸ்தான் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது மற்றும் செல்லாத ஒன்றாகும்.
இந்தியா அதனை ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் ஏற்க முடியாது. இந்திய பகுதிகள் தொடர்பான சீனா – பாகிஸ்தான் எல்லை ஒத்துழைப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாகிஸ்தான் இதுபோன்ற “நாடகங்களை நடத்துவதை” நிறுத்திவிட்டு, சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.


