ஒன்றிய அரசு, பெரியார், அம்பேத்கார்! தவெக எழுதித்தந்ததை அப்படியே உச்சரித்த ஆளுநர்! ரவி மாதிரி இல்லையே | TN Assembly: Governor Arlekar Echoes TVK’s Core Ideology, Avoids Past Confrontations in Historic Address

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: 17-வது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆளுநர் மாளிகைக்கும் முதல்வர் அலுவலகத்திற்கும் இடையே நிலவி வந்த கடுமையான மோதல் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய நிகழ்வுகள் அமைந்திருந்தன.

முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி போல அன்றைய ஆளுங்கட்சியின் உரையைப் மாற்றாமல், கட் செய்து வாசிக்காமல், தற்போதைய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தயாரித்துக் கொடுத்த கொள்கை முழக்கங்களை அவையில் அப்படியே வாசித்துக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ‘ஒன்றிய அரசு’, ‘தந்தை பெரியார்’, ‘அம்பேத்கர்’ ஆகிய வார்த்தைகளை அவர் உச்சரித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தவெக-வின் வரலாற்றுச் சாதனைக்கு ஆளுநர் பாராட்டு

ஆளுநர் தனது உரையைத் தொடங்கிய போதே, கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் தவெக பெற்றுள்ள மாபெரும் மக்கள் ஆதரவைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் பொதுமக்களின் பேராதரவோடு தவெக ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஜாதி, மதங்களைக் கடந்து, எவ்வித பண விநியோகமும் இல்லாமல் தவெக-வை மக்கள் நேர்மையாகத் தேர்வு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜயால் மட்டுமே தமிழ்நாட்டைச் சீராக ஆள முடியும் என மக்கள் உறுதியாகத் தீர்மானித்துள்ளனர்.”

TN Assembly Governor Arlekar Echoes TVK s Core Ideology Avoids Past Confrontations in Historic Address

என்று பாராட்டிய ஆளுநர், பேரறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரையைச் சுட்டிக்காட்டி தனது உரையைத் தொடர்ந்தார். மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 74 ஆண்டுகளில் பார்க்காத அளவுக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து இந்த அரசு செயல்படுவதாகவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த ஆட்சி இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கொள்கை முழக்கங்கள்: இருமொழிக் கொள்கையும் கல்விக்கொள்கை எதிர்ப்பும்

தவெக அரசின் கொள்கை நிலைப்பாடுகளை ஆளுநர் அர்லேகர் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்தார். குறிப்பாக, “தமிழக வெற்றிக் கழக அரசு தமிழ்நாட்டின் பாரம்பரிய இருமொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடர்ந்து தீவிரமாக நடைமுறைப்படுத்தும் மற்றும் பின்பற்றும்” என்று அறிவித்தார். அதே வேளையில், “இந்த அரசு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கடுமையாக எதிர்க்கிறது” என்ற தவெக எழுதிக்கொடுத்த வரிகளை ஆளுநர் எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே வாசித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையான மது ஒழிப்பு குறித்துப் பேசுகையில், “போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன” என்று அறிவித்த போது அவையில் பலத்த கைதட்டல் ஒலித்தது. பல்வேறு நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ உள்ளிட்ட முன்னோடித் திட்டங்களை இந்த அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு என்ற சொல்லாடலும் ஆளுநரின் ஒப்புதலும்

கடந்த காலங்களில் ‘ஒன்றிய அரசு’ (Union Government) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆளுநர் மாளிகை கடுமையான எதிர்ப்பைக் காட்டி வந்தது. ஆனால், இன்றைய உரையில் அந்த வார்த்தை பல இடங்களில் union govt என்று இடம்பெற்றிருந்தது. “தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு முக்கிய நிதித் திட்டங்கள் தொடர்பாக ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் விஜய் முறைப்படி கோரிக்கைகளை வைத்துள்ளார். குறிப்பாக, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு இதைச் சாதகமாகப் பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு உள்ளது” என்று ஆளுநர் வாசித்தார்.

உரையின் நிறைவாக, தவெக-வின் அடித்தளமான கொள்கைத் தலைவர்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார். “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சட்டமேதை அம்பேத்கார், வீரமங்கை ராணி வேலுநாச்சியார் மற்றும் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சமூகநீதி வழியிலேயே இந்த அரசு தன் பயணத்தைத் தொடரும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். கடந்த ஆட்சியில் ஆளுநர் ரவி பெரியார், அம்பேத்கார் பெயர்களை சொல்லாமல் தவிர்த்த நிலையில் இப்போது அந்த சூழல் மாறி உள்ளது.

எழுதித் தந்த உரையில் ஒரு வார்த்தையைக் கூட மாற்றாமல், மாநில அரசின் தன்னாட்சி உரிமைகளுக்கும் கொள்கைகளுக்கும் மதிப்பளித்து ஆளுநர் அர்லேகர் நடந்துகொண்ட விதம், தமிழ்நாட்டில் ஒரு சுமுகமான மற்றும் ஆரோக்கியமான அரசியல் சூழல் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *