தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்திலேயே இயங்கி வருவதாக அ ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார். மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ முதலமைச்சர் இன்னும் ஒரு சினிமா நடிகராகவே பொதுவெளியில் உலா வருகிறாரே தவிர, தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. அவரது மேடைப் பேச்சுகள், உடல்மொழிகள் மற்றும் திருச்சி, கரூர் கூட்டங்களில் அவர் காட்டிய பாவனைகள் அனைத்தும் ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் டயலாக் பேசுவது போன்றே பொதுமக்களுக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

திரைப்படப் பிரபலத்தை வைத்து, மாற்று ஆட்சி என்ற எண்ணத்தில் மக்கள் அளித்த வாக்குகளைக் கொண்டு, தி.மு.க கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுத்து, அமைச்சர் பதவி கொடுத்து இந்த ஆட்சி தக்கவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைவார்த்தை காட்டி, சதி செய்து ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஊழல் மட்டுமல்ல ஜனநாயக படுகொலை. மற்றவர்களை ‘களவாணி’ என்று விமர்சிக்கும் முதலமைச்சர்தான், உண்மையில் பிற கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கிய ஒரிஜினல் களவாணி.
விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றிய இந்த அரசுக்கு எதிராகப் போராடி, உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்காமல், தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே அரசு பணிகளை வாரி வழங்குவது தவறான முன்னுதாரணம்.

எதிர்காலத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இந்த அரசை எதிர்க்கக் கூடுமா என்ற கேள்விக்கு, அரசியலில் சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும். கடந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவும் ராஜாஜியும் கூட இணைந்து செயல்பட்டுள்ளனர். வைகோ இப்போதைய முதலமைச்சருக்கு மட்டுமல்ல, அவர் கடந்த காலத்தில் கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் எனப் பலருக்கும் கவசமாக இருந்தவர். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் தற்போதைய முதலமைச்சரை ஒப்பிட வேண்டாம். விஜயகாந்த் பொதுவெளியில் எதார்த்தமாக வாழ்ந்தவர், ஆனால் தற்போதைய முதலமைச்சர் பொதுவெளியிலும் சினிமா பாணியிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார்.” என்றார்.