தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். அவரின் உரையில், “பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், கிராமப்புறங்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எனவே, கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.
அவற்றில் பெண்களை நடத்துநராகவும், ஓட்டுநராகவும் நியமித்து அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை 1989-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார்.

இருப்பினும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைப் பறிப்பது டாஸ்மாக் மதுக்கடைகளே ஆகும். 2025 தீபாவளிக்கு ரூ.789.95 கோடி, பொங்கலுக்கு ரூ.725.56 கோடி, புத்தாண்டுக்கு ரூ.100 கோடி என மக்கள் மதுவுக்காகச் செலவழித்துள்ளனர். பெண்களின் சேமிப்புப் பணம் அனைத்தும் டாஸ்மாக்கிற்குச் செல்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47-ன் படி, அரசே மது விற்பனை செய்ய உரிமையில்லை என உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக முழு மதுவிலக்கைக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.