” ஒரே ‘யூனிஃபார்ம் மாடல்’ : காமராசர் கனவை மீட்டெடுக்குமா தவெக அரசு?” – Kumudam

Spread the love

1960களின் தொடக்கத்தில், பள்ளி மாணவர்களுக்குச் சீருடை முறையைக் கொண்டு வந்தவரும் பெருந்தலைவர்தான். பள்ளிப் படிப்பில் இருக்கும் சிறு வயது மாணவர் மனங்களில் வித்தியாசம் படிந்துவிடக்கூடாது; அனைவரும் சமம்’ என்கிற எண்ணம் வேரூன்ற வேண்டும் என்பதற்காக, எல்லா நாட்களிலும், எல்லா மாணவரும். பள்ளிக்குச் சீருடை அணிந்து வர உத்தரவிட்டார் அவர்.

அறிவாளிகள்கூட இன்று வரை வெளியில் அதிகம் பேசாத ஒரு ‘சமத்துவப் புரட்சி அது. ஆனால்.. இன்றுள்ள ‘சீருடை கலாசாரம்’ அதன் நோக்கத்தையே சிதைத்துவிட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு சீருடை அதிலும், உயர் கட்டணப் பள்ளிகளில், உயர் விலை சீருடை! சீருடைத் துணியின் தரமே வேற வேற வேற லெவல்! பல தனியார் பள்ளிகளில் ‘பிராண்டட்’ உடைக்கு மட்டுமே அனுமதி! அதையும், தனியே கட்டணம் பெற்றுக் கொண்டு, பள்ளிகளே வழங்குகின்றன.
தரம் முக்கியம்! அரசு /உள்ளாட்சிப் பள்ளி மாணாக்கர் அணியும் சீருடையானது. உயர் கட்டணத் தனியார் பள்ளி மாணவர் அணியும் சீருடைக்குப் பக்கத்துல கூட வர முடியாது!

எங்கேயேனும், எப்போதேனும் உள்ளாட்சிப் பள்ளி மாணாக்கரையும், உயர் கட்டண தனியார் பள்ளி மாணாக்கரையும் ஒன்றாக யாரும் பார்த்திருக்கிறீர்களா?
ஏதேனும் ஒரு போட்டி, அல்லது, நிகழ்ச்சியில் இரு தரப்பினரும் பங்கு கொள்ள நேர்ந்தால், தனித்தனியே இரு வேறு குழுக்களாகத்தான் தெரிவார்கள்; இருப்பார்கள்.
சீருடைதான் அடையாளம்’; சீருடைதான் ‘வித்தியாசம்!

கர்மவீரர் காமராசரின் ‘தொலைநோக்குச் சீருடைக்கும் இன்றைய சீருடைக்கும் இடையே எவ்வளவு தொலைவு! மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய், ஒரே உத்தரவில் இதனைச் சீர்செய்யலாம். எல்லாப் பள்ளிகளும், அனைத்து மாணவருக்கும். கதர் / கைத்தறிச் சீருடைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மற்ற நிறுவனத் துணிகளுக்கும், கதர் / கைத்தறி உடை களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.

நிறுவன உடைகளின் விலையில் பெரும்பகுதி, அந்த நிறுவனத்துக்கே லாபமாய் போய்ச் சேரும். கதர் /கைத்தறித் துணி விற்பனைத் தொகையில், சுமார் 90% வரை, பருத்தி உற்பத்தியாளர்,நெசவாளர் குடும்பத்துக்கு நேரடியாய்ச் சென்று சேரும். சொல்வதுண்டு… ‘நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கதர்த் துணியிலும் ஒரு குடும்பத்தின் அத்தியாவசியத் தேவை நிறைவடைகிறது.

இது மட்டும் அல்ல; கதர் /கைத்தறி விற்பனை கூடுவதால், உள்நாட்டுக் கிராமப்புறப் பொருளாதாரம் வலுவடைகிறது. அரசுக்கு வருமானம்: சமூகத்தில் சமத்துவம் -இரண்டையும் கதர் சீருடை’ உறுதி செய்யும். சீருடையின் நிறத்தை வேண்டுமானால், ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், சீருடையின் விலை, தரம், ‘வெளிப்பாடு’ சீராக (மட்டுமே) இருக்க வேண்டும்.

கதர் சீருடை’ தமிழக அரசு வலியுறுத்தினால், விரைவில் பிற மாநில அரசுகளும் இதனைப் பின்பற்றும் தமிழக அரசு இந்தியாவுக்கே ஒரு ‘யூனிஃபார்ம் மாடல்’ ஆக இருக்கும்.
நல்லதுதானே.?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *