கோவையில் தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானை; கோழிகமுத்தி முகாமிற்கு மாற்றம் | Distressed elephant calf separated from its mother transferred to Kozhikamuthi camp

Spread the love

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதியன்று சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் உள்ள பவானிசாகர் அணை நீர் பிடிப்புப் பகுதிக்கு தண்ணீர் குடிக்க ஒரு யானைக் கூட்டம் வந்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் இருந்து சுமார் 3 மாதமான ஒரு குட்டி யானை தனியாகப் பிரிந்துள்ளது. தன் தாயையும், கூட்டத்தையும் தேடி அந்தக் குட்டி யானை பரிதவிப்புடன் சாலையோரங்களில் சுற்றித் திரிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால் யானை கூட்டங்கள் அதனைச் சேர்க்க மறுத்ததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்தக் குட்டி யானையை மீட்டு, பெத்திக்குட்டை பகுதியில் உள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர்.

குட்டி யானை

குட்டி யானை

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி அந்தக் குட்டி யானையைக் கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

இதன்படி இன்று அந்த குட்டி யானை கோழிகமுத்தி யானைகள் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் மற்றும் வனகால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பில், குட்டியானைக்குத் தேவையான உணவு, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குட்டியானையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *