இன்னும் 100 டாலர்களுக்கு மேல் தான் கச்சா எண்ணெய் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் எண்ணெய் இறக்குமதிகள் தடைப்படாமல் இருக்க, அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒன்று தான், கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடி சொன்ன “தங்கத்தை ஓராண்டிற்கு வாங்காதீங்க’ என்பதும், தங்கம், வெள்ளி இறக்குமதி வரி அதிகரிப்பும்.
இந்த நடவடிக்கைகளை இன்னும் வலுப்படுத்துவது போல இன்னொரு செக்கை வைத்துள்ளது மத்திய அரசு.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 16), வெள்ளி இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு. வெள்ளி இறக்குமதி என்றால் கட்டி, நாணயம் என எந்த வடிவிலும் இறக்குமதி கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டால், இந்தியாவில் வெள்ளி இறக்குமதி குறையும், உள்ளூர் சந்தையில் வெள்ளி கிடைப்பது கொஞ்சம் கடினமாகும். இதனால், வெள்ளியின் விலை இந்தியாவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.