"கஜானா காலி எனக் கூறிவிட்டு முதல்வர் இதை அறிவிக்கிறார்!" – கேள்வி எழுப்பும் திமுக எழிலன்

Spread the love

விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கையைத் தொடர்ந்து முதல்வர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனமும், அந்த வாகனத்தைப் பராமரிக்கத் தொகையும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கென நியமித்துக் கொள்ளும் உதவியாளர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுமென அறிவித்திருக்கிறார். இது குறித்து திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் பேசியிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவர் பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, உதவியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பது மற்றும் பெட்ரோல் மானியம் அளிப்பது குறித்த செய்திகள் வெளியாகின. அடிப்படையில் பார்த்தால், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒவ்வோர் ஆண்டும் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த ‘எம்.எல்.ஏ நிதி’ திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள்தான் கொண்டு வந்தார். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மக்களின் குறைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிப் பற்றாக்குறை சூழலில், இந்த புதிய சலுகைகளுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இது குறித்து நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன்.

நான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் என்பதால் இதைச் சொல்கிறேன். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விவரங்களை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதில் யார் யாருக்கு கார் இருக்கிறது, எவ்வளவு சொத்துகள் இருக்கிறது ஆகிய விவரங்கள் வெளிப்படையாகத் தெரியும். ADR அறிக்கையின்படி, நமது சட்டமன்றத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ-க்களில் 190-க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

எழிலன்  எழிலன் - திமுக
எழிலன் – திமுக

அப்படி இருக்கும்போது, ஏழை எளிய சாமானியர்களைச் சட்டமன்றத்திற்கு அழைத்து வருவதாகச் சொல்லும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களைப் பரிசீலித்து, உண்மையில் கார் வசதி இல்லாத, தேவைப்படும் உறுப்பினர்களுக்கு மட்டும் வாகனம் வழங்குவதுதான் சரியாக இருக்கும்.

நிதிப் பற்றாக்குறை போன்ற சூழல்கள் இருப்பதாகச் சொல்லும்போது, இது போன்ற திட்டங்களை நீங்கள் செயல்படுத்துகிறீர்கள். முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டது என நீங்கள் முன் வைக்கும் விமர்சனமும் இங்கு கேள்விக்குறியாகிறது.” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *