சுந்தரருக்கு, அவர் விரும்பியபடி தவநெறி போதனையே வரமாகக் கிடைத்த தலம் இது. மேற்கு பார்த்த கோயில். விசாலமான பிராகாரம். அருள்மிகு பக்தவத்சல பெருமாள், தேவியருடன் அருளும் முருகன், பாலமுருகன், சூரிய லிங்கம், நடராஜ பெருமான், சூரிய தேவன், நவகிரகங்கள், பைரவர், நால்வர் பெருமக்கள் ஆகியோரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
கருவறையில் எழிலுற காட்சி தருகிறார் சிஷ்டகுருநாதேஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. துறையூர்நாதர், தவநெறி ஆளுடையார் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.
இவரை வணங்கி வழிபட்டுவிட்டு கருவறையை வலம் வந்தால், கோஷ்ட மூர்த்தங்களாக துர்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இந்தப் பிள்ளையார்… இறைவனுக்கும் சுந்தரருக்கும் நடைபெற்ற அருள் விளையாடலில், சாட்சித் திருக்கோலம் கொண்ட சாட்சி விநாயகராக அருள்கிறார்.

மூலவர் முன்மண்டபம் தாண்டி, உள் வாயில் வழியே சென்றால் அம்பாள் சந்நிதியை அடையலாம். வடக்குநோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறாள் அன்னை சிவலோகநாயகி.
நாரதர், வசிஷ்டர், அகத்தியர் போன்ற மகாமுனிவர்களும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனும் திருத்துறையூரில் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது.
இது சூரியத் தலம் என்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 5 முதல் 10-ஆம் தேதி வரை, சூரியக் கதிர்கள் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் வந்து பணிகின்றன. இந்த ஊர் தீர்த்தமும் சூரிய தீர்த்தம்தான்.