கடலூர்: ரியல் எஸ்டேட் பிசினஸ் `டு’ அமைச்சர்; வீட்டுவசதித் துறையை வசப்படுத்திய தவெக ராஜ்குமார் யார்?

Spread the love

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், நா.த.க சார்பில் சரசுவும், த.வெ.க சார்பில் ராஜ்குமாரும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது முதல் பத்து சுற்றுகள் வரை இரண்டாமிடம், மூன்றாமிடம் என மாறி மாறி வந்து கொண்டிருந்தார் ராஜ்குமார். அதன் பிறகு நகர்ப்புற வாக்குகள் எண்ணப்பட்டபோது, அ.தி.முக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்துக்குச் சென்றார்.

அமைச்சர் B. ராஜ்குமார்
அமைச்சர் B. ராஜ்குமார்

அதன் பிறகு இருபதாவது சுற்றில் 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனை வீழ்த்தினார் ராஜ்குமார். அதேபோல 15,598 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான ராஜ்குமார், 1996-ம் ஆண்டு விஜய் மக்கள் மன்றத்தில் இணைந்தார். 2002-ல் சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை முடித்தவர், அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தார்.

த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தீவிர விசுவாசியாக செயல்பட்டதால், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார். அதனடிப்படையில்தான் கடலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்று எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார்.

விஜய் மக்கள் மன்றம் தொடங்கிய காலகட்டத்தில் அது எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு வந்த தேர்தல்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் கைகாட்டுபவருக்கே விஜய் மக்கள் மன்றத்தினர் வேலை செய்து வந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத் தேர்தல்களில் எம்.சி.சம்பத்துக்கு ஆதரவாக வேலை செய்து வந்தனர் விஜய் ரசிகர்கள்.

விஜய்

அதன் பிறகு விஜய் மக்கள் மன்றம் அரசியல் நோக்கி நகர்ந்தபோது, ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றி அவர்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் புஸ்ஸி ஆனந்த். அத்துடன் மாற்றுக் கட்சிக்கு வேலை செய்யும் கலாசாரம் முடிவுக்கு வந்தது.

த.வெ.க அறிவிக்கப்படுவதற்கு முன்பு தன்னுடைய விசுவாசிகளை அடையாளம் கண்ட புஸ்ஸி ஆனந்த், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர்களில் ஒருவர்தான் கடலூர் ராஜ்குமார். கடலூர் மாவட்டத்தில் த.வெ.க சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ இவர்தான். புஸ்ஸி ஆனந்திடம் இவர் காட்டிய விசுவாசம்தான், தற்போது அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *