
சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு, வழக்குகள், சோதனைகள் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தலைமை தன்னை கைவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் செந்தில்பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக கட்சி மாற வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் இருந்து விலகி, பாஜக அல்லது அதிமுகவிற்கு தாவ உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி பேசியது, அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய செந்தில் பாலாஜி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவரது பேச்சு, திமுகவை விட்டு விலகப் போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்ததாக அக்கட்சியினர் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பேரவையில் இரு தரப்புக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் இந்த விவாதம் கடும் அமளியாக மாறும் சூழலும் ஏற்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்பாக தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சட்டப்பேரவையில் வெளிப்படையாக திமுக தலைமையை ஆதரித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதன் மூலம், செந்தில் பாலாஜி கட்சி மாற உள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவரே சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கருதுகின்றன. இருப்பினும், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து தொடர்ந்து வெளியாகும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது அடுத்தடுத்த நகர்வுகள் அமையுமா என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.