கட்சி போணியாகவில்லை… காங்கிரஸுடன் இணையும் த.மா.கா? சோர்ந்துபோன வாசன்! – Kumudam

Spread the love

‘நம்மைப்போல நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை…’ என்ற பாடல் வரிகளை இப்போது சத்யமூர்த்தி பவனிலும், ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்திலும் மாறி, மாறி கேட்க முடிகிறது. காங்கிரஸ் ஜோதியில் த.மா.கா ஐக்கியமாகப்போவதே இதற்கு காரணம் என்கிறது கதர் வட்டாரம்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் சீனியர் லீடர் ஒருவர், “காங்கிரஸின் மிகப்பெரிய ஆளுமையான மூப்பனாரால் 1996ல் த.மா.கா. உருவாக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு 2002ல் காங்கிரஸுடன் இணைந்தது த.மா.கா. காங்கிரஸ் மேலிடமும் மூப்பனாரின் மகன் வாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது.

குறுகிய காலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர், இரண்டு முறை மத்திய அமைச்சர் என அவரை மரியாதையுடன் நடத்தியது டெல்லி. இந்த நிலையில்தான் 2014ல் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க.வின் அதிகார மையத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற வாசன், 2014ல் த.மா.கா.வை மீண்டும் துவங்கினார்.

பா.ஜ.க. இடம்பெற்றிருந்த அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமான வாசன், 2020ல் ராஜ்யசபா எம்.பி. ஆனார். அதன்பிறகு வாசனுக்கு முக்கியத்துவம் தரவில்லை அதிமு.க. தலைமை. 2021 மற்றும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தல்களில் த.ம.கா.வுக்கு வீக்கான தொகுதிகளை ஒதுக்கியது அ.தி.மு.க. இதனால் மன உளைச்சல் அடைந்த வாசன், கூட்டணியை விட்டு வெளியே வரத் தயாரானார். ஆனால் அவரை அப்படியே இழுத்து பிடித்தார் அந்த தொழிலதிபர். வேறு வழியின்றி அடக்கி வாசித்த வாசன், 2026ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக முயற்சி செய்தார். ஆனால் கேட்டை இழுத்து மூடியது அதி.மு.க. தலைமை.

இதனால் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய வாசன், தி.மு.க அல்லது த.வெ.க. பக்கம் சாயலாமா என்ற யோசனையில் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி த.மா.கா. நிறுவனர் மூப்பனாரின் 25வது நினைவுநாள் அனுசரிப்பு சென்னையில் நடந்தது. கடந்தாண்டு இதே நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்போதைய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எடப்பாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆனால் இந்த ஆண்டு அப்படி அமையவில்லை. பா.ஜ.க. சார்பில் தமிழிசை தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை. அதேசமயம், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது மாணிக்கம் தாகூரிடம் சில நிமிடங்கள் மனம் திறந்து பேசினார் வாசன்.

இதற்கிடையே பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபரும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் வாசனை கைவிடவே, அவரது நிலைமையை உணர்ந்த காங்கிரஸ் மேலிடமும் வாசனை வரவேற்கத் தயாராகிவிட்டது. விரைவில் சரத் பவாரைப்போல வாசனும் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கப்போகிறார்” என முடித்தார்.

இதுகுறித்து தமாகா துணைத் தலைவர் விடியல் சேகரிடம் கேட்டபோது, “தேஜ, கூட்டணியிலிருந்து வெளியேறியதும், பெரும்பாலான நிர்வாகிகள் த.வெ.க. கூட்டணியில் பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். சில அரசியல் நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன. காங்கிரஸுடன் மீண்டும் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும்” என்றார்.

எப்படி இருந்த வாசன் இப்படி ஆகிட்டாரே! 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *