தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுமார் 137 அடி உயரத்தில், 9 நிலைகள் கொண்ட கோயில் ராஜகோபுரம் உள்ளது. 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. 9வது நிலையில், கி.பி. 18-ம் நூற்றாண்டில் முருக பக்தரான பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பித்தளையால் ஆன பிரமாண்ட மணி உள்ளது.

அந்தக் காலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு 12 மணி உச்சிக்கால தீபாராதனையின்போது அந்த மணி ஒலிக்கப்படுமாம். அதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மணி மண்டபங்களில் அடுத்தடுத்து ஒலிக்கப்பட்டு இறுதியாக கோட்டையில் மணி ஒலிக்கப்படுமாம். அந்த மணியோசையைக் கேட்டபிறகே கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வீரசக்கதேவியை வணங்கிவிட்டு மதிய உணவு உண்பது வழக்கமாம்.