கரூர்: `நிதி ஒதுக்கியாச்சு; சாலை எப்போது போடுவீங்க?'- சிதிலமடைந்த சாலைகள்; கேள்வி எழுப்பும் மக்கள்!

Spread the love

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அங்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகள், தெருக்கள் பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் பழுதடைந்து உள்ளன. அம்ருத் 2.0 குடிநீர் திட்ட பணிகளுக்காக இந்த தார் சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற காரணத்தால், சாலைகளில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமடைந்து நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தார் சாலையை பராமரித்து புதுசாலை அமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

damage aana saalai

அதன்படி, தமிழ்நாடு அரசு நகர்ப்புற சாலை கட்டமைப்பு 2025 -26 -ன் திட்டத்தின் கீழ் தார் சாலைகள் பலப்படுத்துதல் பணி செய்வதற்கு ரூபாய் ஒரு கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. 4-வது வார்டு அங்காளம்மன் கோயில் தெரு முதல் மேல அக்ரஹாரம், நடு அக்ரஹாரம், மேலக்கார தெரு, கீழ அக்ரஹாரம் வரை தார் சாலை பலப்படுத்துதல் பணி மற்றும் பிச்சம்பட்டி மயானம் செல்லும் சாலை, கோவக்குளம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கு கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் நடந்தது. ஆனால், 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது.

இது குறித்து பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்,

“இதனால், அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், சத்துணவு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் சாப்பிடுபவர்கள், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம், நூலகம், நீதிமன்ற வளாகம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம வங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அங்காளம்மன் கோயில், ஸ்ரீ பூமி நீளா வரதராஜ பெருமாள் கோயில், ருக்மணி சத்திய பமா சமேத ராஜகோபால சுவாமி கோயில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், ஆகியவற்றிற்குச் செல்லும் பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் வாசிகள், வாகனங்கள் செல்வதற்கு மட்டுமன்றி, நடந்துகூட செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

damage aana saalai

எனவே, அரசு ஒதுக்கிய நீதியை சரியாகப் பயன்படுத்தி உடனடியாக தார் சாலை பலப்படுத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால், போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *