திமுகவின் ஆப்ரேஷன் D… உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்…! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 118 தொகுதிகளில் போட்டியிட்டு, பெரும்பாலான அரசியல் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியை அமைத்தார். தற்போது அந்த அரசு இரண்டு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய அரசியல் புயல் உருவாகும் சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைமையிலான இந்த கூட்டணி அரசு பதவியேற்ற தொடக்க காலத்திலிருந்தே சில முக்கிய கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மெத்தனமான அணுகுமுறையும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், இடதுசாரி கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் மசோதா மற்றும் மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான விவாதங்களின்போது சிபிஐ மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராக வெளிப்படையாக குரல் எழுப்பினர். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்தும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளோ, மக்கள் மத்தியில் போராட்டங்களோ முன்னெடுக்கப்படவில்லை என்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், தொழிற்சங்க உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பாக தவெக அரசு எடுத்துள்ள சில முடிவுகளும் இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கருத்து முரண்பாடுகளை அரசியல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியான திமுக திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, திமுக தரப்பில் ‘ஆபரேஷன் மேக்-பேக்’ என்ற பெயரில் ரகசிய அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர்களுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், கொள்கை ரீதியாக வேறுபட்ட அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது இடதுசாரிகளின் அரசியல் அடையாளத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சிபிஐ (2), சிபிஎம் (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கூட்டணியில் இருந்து விலக்கச் செய்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை கேள்விக்குறியாக்குவதே திமுகவின் முக்கிய அரசியல் இலக்காக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த நான்கு மாதங்களுக்குள் இந்த அரசியல் நகர்வுகளை நிறைவேற்றும் வகையில் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் முகாமிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கூட்டணியை தக்கவைத்துக் கொள்ளவும், ஆட்சியைச் சுற்றியுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்கவும் தவெக மூத்த நிர்வாகிகள் உடனடியாக களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்து கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தோழமைக் கட்சிகளின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழிகளும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், வெறும் வாய்மொழி உறுதிமொழிகள் போதுமானதாக இருக்காது என்றும், கொள்கை ரீதியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதில் சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்கள் கூட்டணி அரசியலை மையமாகக் கொண்டு கடும் பரபரப்பு நிலவும் என்றும், இந்த அரசியல் மோதலில் யார் கை ஓங்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *