தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் மாற்றம் விஜய்யின் அரசியல் எழுச்சிதான். 1977-க்குப் பிறகு முதல் முறையாக திமுக அல்லது அதிமுக அல்லாத ஒரு சக்தி ஆட்சியைப் பிடித்திருப்பது மாநில அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் வருகை, இரு திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியையும் பாதித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே உருவாகியுள்ள புதிய அரசியல் மனநிலை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பாரம்பரிய அரசியல் கணக்கீடுகளை மாற்றியுள்ளது.
இதன் விளைவாக, இன்று அதிமுக தனது எதிர்க்கட்சித் தகுதியை தக்கவைத்துக் கொள்ள போராடும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில், திமுக மீண்டும் அரசியல் மைய எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.
கூட்டணியில் ஏற்பட்ட சிதறல்கள் இருந்தாலும், திமுக இன்னும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அமைப்பு வலிமை கொண்ட அரசியல் கட்சிகளில் ஒன்றாகவே உள்ளது. மாவட்ட அளவிலான கட்டமைப்பு, உள்ளாட்சித் தளத்தில் இருக்கும் செல்வாக்கு, நீண்டகால அரசியல் அடித்தளம் ஆகியவை திமுகவின் முக்கிய பலங்களாக உள்ளன.
ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசை நேரடியாக அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் முக்கிய சக்தியாக திமுக தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. எனவே, கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திமுக முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறுவது இன்னும் அவசரமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. தனித்து களம் காண்பது குறித்து பரிசீலிப்போம் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்திருப்பதும் திமுகவின் இன்றைய நிலையை காண்ப்பிக்கிறது
அதேபோல், அதிமுக அரசியல் ரீதியாக முற்றிலும் பலவீனமடைந்துவிட்டதா என்ற கேள்விக்கும் எழுந்துள்ளது
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்னும் வலுவான அடிப்படை அமைப்பைக் கொண்ட கட்சியாக அதிமுக தொடர்கிறது. பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியைத் தக்கவைத்திருப்பதும் அதன் அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் உள்கட்சி அதிருப்திகள், முக்கிய தலைவர்களின் விலகல்கள், புதிய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விஜய் தலைமையிலான புதிய அரசியல் சவால் ஆகியவை அதிமுக எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
தமிழ்நாடு அரசியல் தற்போது ஒரு முக்கிய இடைநிலைக் கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. திமுக தனது கூட்டணியை மறுசீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதிமுக தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க போராடுகிறது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயித்த திமுக – அதிமுக அரசியல் சமன்பாடு தற்போது புதிய சோதனையை சந்தித்துள்ளது. இந்த மாற்றமான அரசியல் சூழலில் தங்களை மறுவடிவமைத்து மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவது எந்தக் கட்சி என்பதையும், தமிழக அரசியலின் அடுத்த அத்தியாயத்தை எழுதப் போவது யார் என்பதையும் காலமே தீர்மானிக்க வேண்டும்.