கர்நாடகாவிலிருந்து டூவீலரில் குட்கா பொருள்கள் கடத்திவந்த நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ்!

Spread the love

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குட்கா, பான் மசாலா (ஃபைல் படம்)

அதே நேரம், இவர்கள் மீதான கண்காணிப்பையும் காவல்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையினர் இவர்களை குறிவைத்து பிடித்து சிறைக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ அன்பழகனுடன் காவல் குழுவினர் நேற்று சேலம் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஷாகித் அன்வர் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஷாகித் அன்வர்

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன் சகோதரருடன் சேர்ந்து தமிழ்நாட்டில தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பெங்களூரிலிருந்து வாங்கி வந்து கிருஷ்ணகிரியிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மொத்தம் 336.434 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2,45,045 ஆகும்.

இக்குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பாஷித் அன்வர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக உணவு பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *