ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தங்கள் மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நீதியை வழங்கத் தவறிவிட்டார் என்று 2017-ல் கர்னூலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 15 வயது தலித் சிறுமியின் பெற்றோர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் ஆந்திர முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சந்தித்து, தங்கள் மகளின் வழக்கில் நீதி கிடைக்க உதவுமாறு முறையிட்டனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாய், பவன் கல்யாண் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதை நாங்கள் துணை முதல்வரிடம் தெரிவித்தோம். அது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் ஆதாரங்களையும் காட்டினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று கூறினார். மேலும், “பெண்களின் பாதுகாப்பு மற்றும் நீதியின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட தலைவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி அமைதியாக இருக்க முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பவன் கல்யாணுடனான சந்திப்பு குறித்து விவரித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், “நாங்கள் அவரைச் சந்தித்தபோது, ‘இந்த வழக்கில் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. டிஎன்ஏ மற்றும் அறிக்கைகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. இப்போது நான் சென்று அறிக்கைகளைச் சேகரிக்க முடியாதல்லவா?’ என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், பவன் அண்ணா… 2019-ல் நீங்கள் பார்த்ததும் இதே அறிக்கைகள்தானே? ஆம், அறிக்கைகளும் டிஎன்ஏ-வும் சிதைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் எங்களுக்கு வாக்குறுதி கொடுத்தாரே, அதற்கு என்ன ஆனது?” என்று கண்ணீருடன் கேட்டார்.

தற்போதைய கூட்டணி அரசு பதவியேற்ற பிறகும், தலைவர்களை பலமுறை சந்தித்து முறையிட்டும், விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அந்த தம்பதியினர் தெரிவித்தனர். இதற்கிடையில், சிறுமியின் பெற்றோருக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி ஓர் அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு பலமுறை குரல் எழுப்பியுள்ளார். பிப்ரவரி 2020-ல் நடந்த ஜனசேனா பேரணியில், தாய் பார்வதி, பவன் கல்யாணுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் துணை முதல்வராகப் பதவியேற்ற பிறகும் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், அவரை மீண்டும் சந்தித்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி, கர்னூல் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளி வளாகத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் விடுதி அறையில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்த இந்த வழக்கு, பாலியல் வன்கொடுமைக்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் விசாரணை சரியாக நடைபெறவில்லை என குடும்பத்தினரும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, 2020-ல் அன்றைய ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தால் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. ஆனால், பிப்ரவரி 2025-ல், தங்களுக்குப் பல முக்கிய வழக்குகள் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சிபிஐ ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.