ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான தோப்பு வெங்கடாசலம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுக தலைமை அவருக்கு சீட் வழங்காமல் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அதிருப்தியடைந்த அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிமுக தலைமை அவரை நீக்கியது.
அதனைத் தொடர்ந்து, 2021 ஜூலை 11-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுகவின் கொள்கைகளை ஏற்று ஈரோட்டில் கட்சியை பலப்படுத்துவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
திமுகவில் இணைந்த பிறகு, ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்துடனும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தோப்பு வெங்கடாசலம் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்ததும், திமுகவில் எதிர்பார்த்த அரசியல் முன்னேற்றம் இல்லாததும் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விலகல் குறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கேட்டபோது,
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. பெருந்துறை, பவானி தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே காரணம் என நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பெருந்துறையில் நான் வெற்றி பெற்று அமைச்சராகிவிடக் கூடாது என்பதற்காக கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடந்ததாகவும், தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளருக்கு பண உதவியும் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், “துரோகிகளோடு அரசியல் செய்ய முடியாது” என்று கூறிய தோப்பு வெங்கடாசலம் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், ராஜினாமா செய்ய வேண்டியது தோப்பு அல்ல, துரோகம் செய்தவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி, தேர்தல் தோல்வியால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும், உண்மை விசாரணையில்தான் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதுஅறிவாலயத்தை விட்டு மீண்டும் இலை முகாமுக்கு செல்ல காரணம் என்னவென்றால் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் தோப்பு வெங்கடாசலம் கட்சி தலைமையுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனுடன், திமுகவுக்குள் உட்கட்சி பூசலும் ஏற்பட்டதாலும், தோப்பு வெங்கடாச்சலத்துக்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், அதனால் கட்சிப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபடாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், திமுக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தோப்பு வெங்கடாசலம் அடுத்த கட்ட அரசியல் நகர்வாக மீண்டும் அதிமுகவில் இணையப்போகவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்துடன் தற்போது இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அரசியல் களத்தில் பேசிவருகின்றன.
அதனைத் தொடர்ந்த இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தோப்பு நான் யார் மீதும் குற்றம் சுமத்த வில்லை. ஆனால் எந்த கட்சியில் இருந்தாலும் அதற்கு உண்மையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய தோப்பு தற்போது நான் எந்த கட்சியிலும் இல்லை என்றும் ஒரு வாரத்திற்கு இதற்கு பதில் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தோப்பு தற்போது அதிமுக நோக்கி பயணம் எடுப்பாரா அல்ல அதிமுகவிலிருந்து விலகிய பலரும் தவெகவில் இணைந்து வரும் நிலையில் இவரும் பனையூரை நோக்கி பயணம் எடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

