கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்… அகற்றப்பட்ட குப்பைகள்! | Pandi Marina Gets Attention: Garbage Cleared

Spread the love

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த அழகுக்கு மாறாக, கடற்கரையின் பின்புறப் பகுதியில், பிளாஸ்டிக் பைகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே கிடந்ததால், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது. அதுமட்டுமன்றி, தொடர்ந்து குப்பைகள் தேங்கினால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், குப்பைகள் நீரில் கலக்காமல் இருக்க தடுப்புகள் இருந்தன. இருப்பினும் அதிகப்படியான குப்பைகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வந்தன.

இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்து, “‘பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்… மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!” என்ற தலைப்பில் நம்முடைய விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், தற்போது பாண்டி மெரினா பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு குப்பைகள் காணப்பட்ட இடங்கள் தற்போது சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. மீண்டும் மெரினா பழைய பொலிவை பெற தொடங்கியுள்ளது .

குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், கடற்கரைப் பகுதிகளில் தூய்மை என்பது ஒருநாள் மட்டும் மேற்கொள்ளப்படும் பணியாக இல்லாமல், தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

குப்பைகள் மீண்டும் அதே இடத்தில் தேங்காமல் இருக்க முறையான கண்காணிப்பு தேவை. அதேபோல், கடற்கரைக்கு வரும் பொதுமக்களும் தாங்கள் கொண்டு வரும் பொருள்களை அங்கேயே விட்டுச் செல்லாமல், குப்பைகளை உரிய இடத்தில் போடுவதும் முக்கியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *