வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
தமிழறிஞர், கவிஞர், சொற்பொழிவாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்டத் தியாகி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்த பண்டிதை அசலாம்பிகை அம்மையார், தமது வாழ்வையே தமிழ், தேசம், பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்தவர்.
அசலாம்பிகை அம்மையார் 16/07/1875 அன்று, இன்றைய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள இரட்டணை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ரா.பெருமாள் ஐயர். தாயாரின் பெயர் குறித்த நம்பகமான வரலாற்றுப் பதிவு கிடைக்கவில்லை. இவருக்கு ருக்மணி என்ற மூத்த சகோதரி இருந்தார். ருக்மணியும் சிறந்த கவிஞராக விளங்கியதால், இரு சகோதரிகளும் தமிழ் இலக்கிய உலகில் ‘இரட்டைப் புலவர்கள்’ போன்று திகழ்ந்தனர்.
அசலாம்பிகை அம்மையார் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார். எட்டு அல்லது பத்து வயதில் திருமணம் நடைபெற்றதாக வெவ்வேறு பதிவுகள் குறிப்பிடுகின்றன. திருமணமான சில ஆண்டுகளிலேயே, சுமார் 11 அல்லது 12 வயதில் கணவனை இழந்து இளம் வயதிலேயே கைம்பெண்ணானார். கல்வி பெரும் வாய்ப்பு குறைவாக இருந்த அக் காலச் சமூகச் சூழலில் விதவைகள் கல்வி பெற பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இளம் வயதில் கணவனை இழந்த மகளை சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முடக்காமல், கல்வியின் மூலம் உயர்த்த வேண்டும் என்று அவரது தந்தை பெருமாள் ஐயர் உறுதியாகக் கருதினார். மகள்களுக்கு கல்வி அளிப்பதற்காகவே குடும்பத்துடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூருக்கு குடிபெயர்ந்தார்.