போலவே, பாடல்களை அழகுற படமாக்குவதிலும் கௌதமுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. இந்தப் படத்திலும் பாடல்கள் பெருவரவேற்பைப் பெற்றன. கௌதம், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை எனும் மூவர் கூட்டணி அதைச் சாதித்திருந்தது. இதன் பாடல்கள் அனைத்தையும் பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்தார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.
’உயிரின் உயிரே’ பாடலை கேகே, சுசித்ரா பாடியிருந்தனர். திப்பு, ஷாலினி பாடிய ’என்னை கொஞ்சம் மாற்றி’, பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ’ஒன்றாய் இரண்டா ஆசைகள்’ போன்ற அனைத்துப் பாடல்களும் இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் இருந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் பின்னணி இசையை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்பு, பாண்டிச்சேரி லேக்ஹவுஸின் சுவர்களை உடைத்துக்கொண்டு வெளியே விழும் காட்சியில் தொடங்கி, பாண்டியா அன்புவின் ஆதாரத்தின் மீதே கைவைக்கப்போவதான அறிவிப்பை வெளிப்படுத்தும் இடைவேளைக் காட்சியில் பயணித்து, இறுதி வரை படத்தின் பரபரப்பை இசையால் நகர்த்திக் கொண்டுபோனது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
அதுவரையிலான தமிழ் கமர்ஷியல் சினிமாக்களில், இறுதிக் காட்சியில் வில்லன், நாயகன் தரப்பிலிருந்து அம்மா, காதலி, குழந்தைகளைப் பணயமாகப் பிடித்துக்கொண்டு போவான். மிஞ்சிப்போனால் அவர்களைக் கட்டிப்போட்டு வைத்துவிட்டு, ஹீரோ ஆள், அம்புகளோடு வரும் வரை காத்துக்கொண்டிருப்பான். அவர்கள் மீது ஒரு சிறு கீறலும் விழுந்திருக்காது. ஹீரோவும் தனியாக வந்து பகுமானமாகச் சண்டையிட்டு, நூறு அடியாட்களையும் வீழ்த்தி, கடைசியில் குடும்பத்தைப் பத்திரமாக மீட்டுச்செல்வார்.
இங்கும் பாண்டியா மாயாவையும், ஸ்வாதியையும் கடத்திக் கொண்டுபோய் வைத்துக்கொண்டு, அன்புவை ஓரிடத்துக்கு வரச்சொல்கிறான். நாமும் மேற்சொன்னக் காட்சியை எதிர்பார்க்கிறோம். அந்தச் சிறு குழுவைப் பிடிக்க அன்புச்செல்வன் போலீஸ் படையோடு செல்கிறான். ஆனாலும், பயனில்லை. அவர்கள் போகுமுன்பாகவே ஸ்வாதியின் தலையை வெட்டிக் கொன்ற பாண்டியா, மாயாவையும் அன்புச்செல்வனின் கண்முன்னாலேயே சுட்டுக்கொல்கிறான். இதை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், நிஜம் இப்படித்தான் இருக்கக்கூடும். ஆனாலும், மாயா காப்பாற்றப்பட்டிருக்கலாம் எனும் ஏக்கம் இன்றளவும் நம்மை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது.!
(தொடரும்)