தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. 108 இடங்களில் தன் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் த.வெ.க. தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் விஜய் கடிதம் வழங்கியிருக்கிறார். இன்று தமிழ்நாடு வந்திருக்கும் ஆளுநரை நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
இதற்கிடையில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். தவெக-விடம் விஜய் வென்ற இரண்டு தொகுதிகளில் ஒன்று, சபாநாயகர் பதவிக்கான ஒன்று என இரண்டு இடங்கள் குறைந்து 106 இடங்கள் மட்டுமே இருக்கிறன.
மீதமிருக்கும் 12 இடங்களுக்கு தமிழ்நாட்டில் வெற்றிபெற்றக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில், தற்போது காங்கிரஸ் சில நிபந்தனைகளுடன் ஆதவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இடதுசாரி கட்சிகள், விசிக போன்ற கட்சிகள் ஆட்சிக்குள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் தோல்வியைத் தழுவி வருகிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா என அவர்கள் இருந்த மாநிலங்கள் அனைத்திலும் தோல்வியையே தழுவியிருக்கிறார்கள்.
அவர்களுடைய வியூகம் தவறானது. அதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து நின்று, அவர்களுக்கு ஆதரவளித்து, மாநில அரசுகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, ஒன்றிய அரசைக் கைப்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.