
கடந்த 29ஆம் தேதி 21 வயது இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பரோடு பெசன்ட் நகர் 34-வது கிராஸ் தெருவில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காவலர் உடையில் வந்த நபர் ஒருவர் தான் காவலர் எனவும், காருக்குள் தவறு செய்கிறீர்களா? என கேட்டு மிரட்டி உங்களது பெற்றோருக்கு தகவல் சொல்லக்கூடாது என்றால் ரூபாய் 8000 பணம் வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பயந்து போன இளம் பெண்ணின் ஆண் நண்பர் அருகில் உள்ள ஏடிஎம்க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியதுடன் பாலியல் தொல்லையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து வெளியே சொன்னால் தவறு செய்ததாக குடும்பத்தினதிடம் கூறிவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
பின்னர் ATM-ல் இருந்து பணம் எடுத்து வந்து ஆண் நண்பரிடம் இருந்து ரூபாய் 8,000 பணம் பறித்துக் கொண்டு அங்கிருந்து காவலர் தப்பிச் சென்றுள்ளார்.இது குறித்து இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்க, நேற்று மாலை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், உயர் நீதிமன்ற வளாக காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஜோசப் என்பது தெரியவந்தது.
தற்போது காவலர் ஜோசப் நெல்லை காவல் ஆணையரகத்தில் உயரதிகாரி ஒருவர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. காவலர் ஜோசபை கைது செய்த சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.