காதலித்துதான் கல்யாணம்… கவினுக்கு காதலி கிடைத்தாளா? நடந்தது கல்யாணமா? – Kumudam

Spread the love

மாமன் மகளே காதலிக்க மறுத்ததால் விரக்தியில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவரும் கவின்… தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தில் இருந்து தப்பிக்க சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடிவரும் நயன்தாரா… இருவரும் ஒரு மியூச்சுவல் பிரண்ட் மூலம் அறிமுகமாகின்றனர். ஒரே பில்டிங்கில் கீழே மேலே தங்கியிருக்கின்றனர்… 

நல்ல நண்பர்களாக அவர்கள் இருவரும்  பழகும் சூழலில் கவினுக்கு நயன் மேல் காதல் வர, அதை சொல்லும் நேரத்தில் இரண்டு பேர் வீட்டிலிருந்தும் அப்பா, அம்மா, சொந்த பந்தம் என கும்பலாக அவர்களை தேடி வந்து விடுகின்றனர்.  இருவரையும் அவரவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல அவர்கள் கட்டாயப்படுத்தும் நேரத்தில், கவின் ஒரு பொய்யை சொல்கிறார்… அதனை தொடர்ந்து நடக்கும் கூத்துக்களும் அதற்கு மத்தியில் நயனுக்கு கவின் மேல் காதல் உருவானதா? என்பதும் தான் கிளைமாக்ஸ்…

கதை, காட்சி, வசனம் என எல்லாமே பல படங்களில் வந்ததுதான் என்றாலும் ரசிக்க முடிகிறது. கவின் நடிப்பு சுமார் ரகம் . நயன் இயல்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பாக்யராஜ், ராதிகா, பிரபு, கதிர் பளிச்… சுஹாசினி தான் பெரிய மைனஸ். பொருத்தமில்லாத தேர்வு. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை பரவாயில்லை. 

இயக்குநர் விஷ்ணு எடவனின் அனுபவமின்மை மேக்கிங்கில் நன்றாகவே தெரிகிறது. நயனும், கவினும் சிவப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் காட்சி கதைக்கு தேவையா? நயனுக்கு வேலை தரும் லூசு குடும்பத்தின் லொள்ளு, சத்யனின் சத்தில்லாத காமெடி அலுப்பை தந்தாலும்… முடிவு என்ன என்பது முதல் காட்சியிலேயே தெரிந்தாலும், படத்தை பார்க்க முடிகிறது…

ஹாய் – முடிந்தால் என்ஜாய்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *