
ஆரம்பத்தில் த.வெ.க.விற்கு ஆதரவு மட்டும் அளித்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஓரிரண்டு பின்வாங்கினாலும் ஆட்சிக்கு ஆபத்து என முடிவெடுத்த த.வெ.க. தரப்பு, 47 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள அதி.மு.க. மீது பார்வையை திருப்பியது. இந்த அசைன்மென்டை, அ.தி.மு.க தரப்பில் லாட்டரி அதிபர் மார்டினின் மனைவியும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸூம், த.வெ.க தரப்பில் ஆதவ் அர்ஜுனாவும் முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே, அ.தி.மு.க அதிருப்தி அணி, த.வெ.க.வுக்கு வாக்களித்தது. ஆனால், டீல் பேசியபடி எதுவும் நடக்கவில்லை. அதிருப்தி அணிக்கு அமைச்சரவையிலும் இடமில்லாமல் போனது.
எனவேதான், குறைந்தபட்சம் எம்.எல்.ஏ பதவியையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என எடப்பாடியிடம் சமாதான தூதுவிட்டனர். ஆனால், எடப்பாடி வளைந்துகொடுப்பதாக இல்லை. அதாவது, ‘நமக்குள் பிரச்னை இல்லை. ஒன்றிணைந்தே செயல்படுவோம். கட்சிப் பதவி பறிப்பு தொடர்பான அறிவிப்பையும், கட்சித்தாவல் தடைச்சட்டம் தொடர்பாக எங்கள் மீது சபாநாயகரிடம் கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுவிடுங்கள்‘ என அதிருப்தி அ.தி.மு.க தரப்பு எடப்பாடியிடம் கேட்டிருக்கிறது. அதற்கு ஆரம்பத்தில் முரண்டுபிடித்த எடப்பாடி, சில கண்டிஷன்களை முன்வைத்திருக்கிறார்.
அதாவது, ‘முதலில் மன்னிப்பு கடிதம் கொடுங்கள். அமைப்புச் செயலாளர் போன்ற மாநிலப் பொறுப்புகளை கவனித்தவர்கள் கவுரவத்திற்காக அதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும். ஆனால், யாருக்கும் மீண்டும் மா.செ. பொறுப்பு கிடையாது. நீங்கள் எம்.எல்.ஏக்களாக தொடரலாம். எங்களுடன்தான் பெரும்பான்மையான நிர்வாகிகள் இருக்கிறார்கள். விருப்பம் இருந்தால் வாங்கள்‘ என ஒரே போடாக போட்டிருக்கிறார் எடப்பாடி.
ஆனால், உள்ளூர் செல்வாக்கு பறிபோவதால் சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ‘இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என கட்சியைப் பலப்படுத்தப்போகிறேன். அப்போது வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால், ‘மாவட்டத்தில் அதிகாரம் செலுத்தமாட்டேன். பொதுச்செயலாளர் பேச்சுக்கு கட்டுப்படுவேன்‘ என்று கட்சியின் விதி 142ன் கீழ் எழுதிக் கொடுங்கள்‘ எனவும் எடப்பாடி அதிரடி காட்டியிருக்கிறார்.
தவிர, அதிருப்தியாளர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக மா.செ.வான பசுபதி உள்ளிட்டவர்கள், தனியாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ‘நீக்கப் பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு கொடுத்தால் கிளைச் செயலாளர் வரை ராஜினாமா செய்வோம்‘ என எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆக, தாய்வீட்டுக்கே திரும்பினாலும் கட்சியில் நமக்கு முக்கியத்துவம் கிடைக்காது. தவெக திமுகவை மீறி அதிமுக இனி தலைதூக்குவது கேள்விக்குறிதான். எனவே, அதிமுகவுக்கு செல்வதற்கு பதிலாக தவெக பக்கம் போய்விடுவோம்‘ என அதிருப்தி அதிமு.க எம்.எல்.ஏக்கள் சிலர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தால் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என ஆஃபர் கொடுக்கப்பட்டது.
அதன்படிதான் அதிமுக எம்.எல்.ஏக்களான சத்தியபாமா, மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். இப்படியாக கட்சி சிதைந்து சின்னாபின்னமாவதைப் பார்த்த அதிமுக நிர்வாகிகள், மாவட்டம்தோறும் கொத்துக் கொத்தாக மாற்றுக் கட்சிகளுக்கு தாவ ஆரம்பித்துவிட்டனர். எனவேதான், இனி அதிமுகவுக்கான இலையுதிர்காலமா என்ற வாதம் எழுந்தது.
இந்த நிலையில், இப்படியாக சிதையும் அ.தி.மு.க.விலிருந்து மேலும் 6 முதல் 13 எம்.எல்.ஏ.க்களை ராஜினமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் த.வெ.க தனிப்பெரும்பான்மை பெற்றுவிடும் என திட்டமிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஆளும் தரப்பு.
அதன்படி, கர்நாடகா எல்லை தொகுதி. பஞ்சாமிர்தம் நகரத் தொகுதி. முட்டை மாவட்டத்தில் ஒரு தொகுதி, கடலோர மாவட்டத்தை சேர்ந்த பூமி தொகுதி மற்றும் ஆந்திர எல்லை தொகுதி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆகியோருடன் வடக்கு மண்டல மாஜி என 10க்கும் மேற்பட்டோரிடம் சில பல ஆஃபர்களோடு டீலிங் நடக்கிறது. மாஜி அமைச்சர் தங்கமணிக்கு வேண்டியவரான பரமத்தி வேலூர் தொகுதி சேகர் எம்எல்ஏ கூட இதே மூடில் இருந்தாராம். ஆனால் அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடியுடன் இணையும் முடிவுக்கு வந்ததால், சேகரின் முயற்சிக்கு தடைபோட்டுவிட்டார் தங்கமணி.
ஆனால், இதையெல்லாம் கௌரவப் பிரச்னையாக பார்க்கும் சி.வி.சண்முகம், தன் கட்சி விசுவாசிகனை மே 27ம் தேதி சென்னையில் வைத்து ஆலோசனை செய்திருக்கிறார் அதன்படி, தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதோடு, விசுவாசிகளையும் கட்சியிலிருந்து கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்க நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகு தன்னை வன்னியர் சமூகத்திற்கான முகமாக முன்னிறுத்திக்கொள்ளவும் அவர் முடிவெடுத்திருக்கிறார் என தெரிகிறது.
இப்படியான சூழலில், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்துவிட்டதால் கட்சித்தாவல் தடைச்சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கச்சொல்லி இ.பி.எஸ் தரப்பிலிருந்து சபாநாயகரிடம் கொடுத்த கடிதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சி.வி.சண்முகத்திடம் சமாதானம் பேசி வருகிறார் வேலுமணி. இவர்களின் குஸ்தியில் சில எம்.எல்.ஏக்கள் பறிபோனதுதான் மிச்சம்” என விரிவாக சொல்லி முடித்தனர்.
இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம் ‘இவையெல்லாம் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கும்போது ஏற்படுகின்ற சிக்கல்தான், எம்.ஜி.ஆர், அம்மா காலத்திலும் இப்படி சிலர் கட்சியைவிட்டு ஓடியது நடந்திருக்கிறது. இதனால் எல்லாம் எங்கள் கட்சி பலவீனம் அடைந்துவிடாது’ என்றார்.
– அ.கண்ணதாசன்