சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் கெளரி முஸ்லிம் மதம் கிடையாது. அமீர்கானுக்குத் தற்போது நடிகர் சல்மான் கானுக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.
சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கௌரி ஸ்ப்ராட் உடனான அவரது மூன்றாவது திருமணத்தையடுத்து ஆமீர் கான் “லவ் ஜிஹாத்தை’ ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி இந்த மிரட்டல் வந்துள்ளது.
ஆர்சூ பிஷ்னோய் மற்றும் டைசன் பிஷ்னோய் என்ற பெயரிலான பேஸ்புக் கணக்கிலிருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ”நமது கலாசாரத்திற்கு எதிராக நம் நாட்டில் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பவர்கள், அமீர்கான் போன்றவர்கள் இதற்கு ஊக்கம் அளிக்கிறார்கள்.
நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, போதுமான அவகாசமும் அளித்துள்ளோம். இதுவே எங்களது இறுதி எச்சரிக்கை. நாங்கள் மிக விரைவில் பதிலடி கொடுப்போம்.
இந்த விஷயம் நமது சனாதன தர்மத்திற்கும் நமது நாட்டிற்கும் எதிரானது. இந்த இழிவான செயலை ஊக்குவிக்கும் எவருக்கும் எங்களது சொந்த பாணியில் பதிலடி கொடுப்போம் என்று எங்களது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். பிரபலம் என்ற பெயரில் இந்த விஷயத்தை ஊக்குவிப்பவர்களின் மூச்சை நாங்கள் அடக்குவோம்.
ராஜஸ்தான் ஸ்ரீகங்காநகரில் பெண் ஒருவருக்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவத்தில், குற்றவாளிகளைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் அதில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திலிருந்து தப்பினால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என அந்தப் பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை மிரட்டல் குறித்து ஆமீர் கான் இன்னும் போலீஸில் புகார் செய்யவில்லை. போலீஸாரும் இந்த மிரட்டலை நாங்கள் பேஸ்புக் மூலம்தான் பார்த்தோம் என்றும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காதல் ஜிஹாத் தொடர்பான புகாருக்கு ஆமீர் கான் ஏற்கனவே பதிலளித்து இருந்தார். தான் திருமணம் செய்த 3 பெண்களும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி சொன்னதில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.