இந்த உலகம் 71% நீராலும் 29% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் தண்ணீருக்கான போராட்டங்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வலுப்பெற்று வருவதை காணமுடிகிறது. அதே நேரம், மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டதிலிருந்து நதிநீர்ப் பங்கீடு என்றச் சிக்கல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மத்தியில் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்தச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், தமிழ்நாட்டின் நீர்வளத்தைப் பெருக்கும் நோக்கில் பல்வேறு பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினார். கீழ் பவானி, மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய், ஆரணியாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி மற்றும் காவிரி கழிமுக வடிகால் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் இதில் அடங்கும்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் எல்லையான ராசிமணலில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைச் சேமிக்கவும், மின்சார உற்பத்தி என இரு திட்டங்களை செயல்படுத்த 1961-ம் ஆண்டு அடிகல் நாட்டி பணிகளையும் தொடங்கினார். ஆனால், அவருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் இத்திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் துரதிர்ஷ்டவசம்.