Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கி இருக்கிறார். முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக சுப்மன் கில் பேட்டிங் ஆட களமிறங்காத சூழலில், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளி இருக்கிறார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இலங்கை கிரிக்கெட் லெவன் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்களை எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி தேவ்தத் படிக்கலின் அதிரடியான சதம் காரணமாக 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன்பின் 3வது நாளான இன்று இலங்கை அணி 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஸ்வால் – ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டிங் விளையாட களமிறங்கவில்லை. கேப்டன்சி பொறுப்பையும் கூட கேஎல் ராகுல் தான் மேற்கொண்டார். இந்த நிலையில் சுப்மன் கில் ஃபார்மில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஒரு பக்கம் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட்டாகினார். அதேபோல் சுப்மன் கில்லும் பவுண்டரிக்கு மேல் பவுண்டரி அடித்து அசத்தினார். புதிய பந்தில் சுப்மன் கில் அதிரடியாக ரன்களை சேர்த்திருப்பது அவரின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பும்ரா, சாய் சுதர்சன் உள்ளிட்டோர் காயம் அடைந்துவிட்டனர்.
இதனால் சுப்மன் கில் காயம் அடைந்தால், இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று பார்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சுப்மன் கில் கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து 2 நாட்களில் குணமடைந்து பேட்டிங் செய்ய களமிறங்கிவிட்டார். இதனால் இந்திய அணியுன் உற்சாகம் அடைந்துள்ளது.