கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக சில காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது.
மொத்த விற்பனையில் ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் தலா கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூ.35-க்கு விற்பனையான நாசிக் வெங்காயம் தற்போது ரூ.40-ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளரிக்காய் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.40-க்கும், மாங்காய் ரூ.50-ல் இருந்து ரூ.100-க்கும் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் பச்சை பட்டாணி ரூ.120-ல் இருந்து ரூ.150-ஆகவும், பச்சை மிளகாய் ரூ.30-ல் இருந்து ரூ.60-ஆகவும் அதிகரித்துள்ளது.
சில்லறை சந்தையிலும் இந்த விலை உயர்வு எதிரொலித்துள்ளது. அங்கு வெங்காயம் கிலோ ரூ.50 வரையிலும், ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பச்சை பட்டாணி கிலோ ரூ.200-க்கும், பச்சை மிளகாய் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் வரத்து சீராகாத நிலையில், விலை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தினசரி உணவுக்குத் தவிர்க்க முடியாத காய்கறிகளின் விலை உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர சமையல் பட்ஜெட்டிலும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

