தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவிட்டு வருவதை கர்நாடக அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளில் நிரம்பிய நீரை வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு திறந்துவிட்டது, கர்நாடகா அரசு.

இந்நிலையில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த உள்ளதாகவும் அதற்கு பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஆதரவு தர வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு ஒரு சில அமைப்புகள் மட்டுமே அதரவு தெரிவித்தன.
கர்நாடகாவில் இன்று பள்ளி, கல்லூரிகள், கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. தமிழக எல்லையில சில இடங்களில் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மைசூர், அத்திப்பள்ளி உள்ளிட்ட சில இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரம், கர்நாடகவிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலிருந்தும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூருக்கு பேருந்துகள் சென்றன.
இந்த நிலையில், போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் கர்நாடக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.