அதற்கு பிறகு வந்த அதிகாரிகள், “நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் பட்டா கொடுப்போம், வாரிசுகளுக்குக் கொடுக்க மாட்டோம்’ என்று நிபந்தனை விதித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றனர்.
ஒருவழியாக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மூலம் சமீபத்தில் இப்பகுதியில் மின்னணு அளவீடு (Digital Survey) பணிகளை மேற்கொண்டன. அதனடிப்படையில் 102 நபர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

தற்போது இதில் 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால் ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, “அணைக்காக எங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு 75 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தற்போது அரசு பட்டா தர முன்வந்தாலும், வனத்துறை அதிகாரிகளின் பிடிவாதத்தால் காலதாமதம் ஆகிறது.
பட்டா இல்லாததால் எங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்குக் கல்விக்கடன் பெற முடிவதில்லை. வங்கிகளில் இதர கடன்களோ அல்லது அரசின் சலுகைகளோ பெற வழியில்லை. வேளாண்மைத்துறை சார்பில் வழங்கப்படும் இலவச நெல் மற்றும் மானியப்பொருட்களைப் பெற பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்கள் கட்டாயம் இல்லாததால் அணைக்காக நிலம் கொடுத்த எங்களின் வாழ்க்கையே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழக முதல்வரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு எங்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் வேதனையுடன்.