இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. அதோடு இரவு 12 மணிக்குப் பிறகும் உறங்காமல் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை நோண்டிக்கொண்டிருக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு போனில் கேம் விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தை மற்றும் சகோதரியை 18 வயது வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் குத்திக்கொலை செய்துள்ளார்.
அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் இளம் தலைமுறையிடம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மற்றொருபுறம் உலகம் முழுவதும் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகச் சரியத்தொடங்கி இருக்கிறது.
இந்தியாவிலும் மக்கள் தொகை தென்னிந்தியாவில் கணிசமாகக் குறைய தொடங்கிவிட்டது. ஆனால் இந்த மக்கள் தொகை குறைவு மற்றும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கு முக்கிய காரணம் யார் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து குழந்தைகள் பிறப்பு விகிதம் 22 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டது.

2008ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அமெரிக்க மக்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் குழந்தைகள் பிறப்பதைக் குறைத்துக்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும், பொருளாதாரம் சரியான பிறகு குழந்தைகள் பிறப்பு விகிதம் மட்டும் அதிகரிக்கவே இல்லை.
இது குறித்து அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கு பொருளாதரம் ஒரு காரணம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில்தான் ஸ்மார்ட் போன்களின் வேகம் பெரிய அளவில் உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அவ்வாறு பரவிய ஐபோன்கள்தான் இப்போது அமெரிக்க மக்கள் தொகை அதிகரிக்க தடையாக இருக்கும் ஒரு கருவியாக மாறி இருக்கின்றன.
ஐபோன்கள், ஸ்மார்ட்போன்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் இரவு நேரத்தில் அதிகமானோருக்குப் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான விருப்பம் இல்லாமல் போய்விடுகிறது.
பாலியல் விருப்பங்களை ஸ்மார்ட்போன்கள் அழித்து விடுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் பயன்படுத்துவதால் அமெரிக்காவில் 15-19 வயதில் 4.5-8.0 சதவிகிதம் மற்றும் 20-24 வயதில் 3.2-6.6 சதவிகிதம் பேர் குழந்தை பிறப்பைக் குறைத்துக்கொண்டுள்ளனர்.