பிள்ளைகளை இழந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிட்ட பிஸ்கட், சாக்லெட், கூல்டிங்க்ஸ், பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கை கூப்பி வணங்கிக் கதறினர். தாய் ஒருவர், “எங்க ராசா இருக்க, எங்கூட வந்திரு கண்ணு” என்று கதறியதைக் கேட்ட பலரும் கண் கலங்கினர்.
கோர தீவிபத்தில் குழந்தைகளைப் பறிக்கொடுத்த பெற்றோர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டாலும் ஆறாத வடுவாக, ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தும் நிகழ்வாக மனதை விட்டு அகலாமல் இருக்கிறது இந்தச் சம்பவம்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “காலையில் மலர்ந்த மொட்டுகளாகச் சிரித்த முகத்துடன் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டு சென்றோம். பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கடவுளே எந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகியிருக்கக் கூடாதுனு ஓடியாந்தோம். இங்கு வந்தால் அந்த ஏரியா முழுக்க ஒரே அழுகுரல்கள். தீயில் கருகிய குழந்தைகளின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன எங்கும் மரணம் ஓலம் கேட்டன.