தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மேயர் சவரணன் தலைமையில் நடந்தது. தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்ட அரங்கில், முதல்வர் விஜய் போட்டோ மட்டுமே இருந்தது. கூட்டத்திற்கு முன்னதாக, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்களின் இருக்கைக்கு முன் இருந்த மேசையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைத்தப்படி கூடத்தில் கலந்துக்கொண்டனர். இதனால் அரங்கத்தில் அதிக அளவில் ஸ்டாலின் போட்டோக்கள் இருந்தன.

இதையடுத்து, கூட்டம் தொடங்கியதும், மண்டல குழு தலைவரும், திமுக கவுன்சிலருமான அசோக்குமார், ஆதரவாளர்களுடன், `எங்கள் தலைவர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியே தீருவோம்” என மேடைக்குச் சென்று, ஆணி அடித்து மாட்டினார். இதைத் தொடர்ந்து, மேலும் சில திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டோவையும், அதிமுக கவுன்சிலர் குமரேசன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோவையும், காங்கிரஸ் கவுன்சிலர் ஐயப்பன் முன்னாள் முதல்வர் காமராஜர் போட்டோவையும் மேடையில் மாட்டினர். பிறகு, ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் தலைவர்களின் பெயரை சொல்லி கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.