சென்னை மெரினா கடற்கரையில் ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் சுழன்ற ராட்டினங்கள், இன்று பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரை, தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்கிறது. கடலலைகளை ரசிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும், நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கவும் மக்கள் இங்கு வருவது வழக்கம். இந்தக் கடற்கரையின் மாலை நேரத்தை இன்னும் உற்சாகமாக மாற்றியவற்றில் முக்கியமானவை ராட்டினங்கள்.
மறைந்த மகிழ்ச்சி
ஒருகாலத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள், ராட்டினத்தில் ஏறாமல் வீடு திரும்புவது அரிது. ராட்டினம் சுற்றும்போது எழுந்த சிரிப்பொலியும், பெற்றோரின் மகிழ்ச்சியான முகங்களும் மெரினாவின் மாலை நேரத்தின் ஓர் அங்கமாகவே இருந்தன. ஆனால் இன்று அந்தக் காட்சி மெல்ல மாறிவிட்டன.
குறையும் கூட்டம்
இப்போது மெரினா கடற்கரையில் நிற்கும் பல ராட்டினங்கள் பெரும்பாலான நேரங்களில் பயணிகளின்றி அமைதியாகக் காத்திருக்கின்றன. காலப் போக்கில் ஒரு நபருக்கு 100 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது, ஒரு பக்கம் கட்டண உயர்வு காரணமாகக் கூட பயணிகள் குறைவான அளவில் வருகை தருகின்றனர் என்று கூறப்படுகிறது.