ஜப்பானில் தற்போது சுமார் 1.329 கோடி (13.29 மில்லியன்) குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அதேசமயம், 1.567 கோடி (15.67 மில்லியன்) செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இதனால், குழந்தைகளை மையமாகக் கொண்டு பொருட்களை தயாரித்த நிறுவனங்கள் கூட, தற்போது நாய் மற்றும் பூனைகளுக்கான பொருட்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
2025-ஆம் ஆண்டில் ஜப்பானில் 6,71,236 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 2.2 சதவீதம் குறைவாகும். மேலும், அந்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 1.14 ஆக சரிந்துள்ளது. அதே ஆண்டில் பிறப்புகளை விட 9,18,253 பேர் அதிகமாக உயிரிழந்ததால், தொடர்ந்து 19-வது ஆண்டாக இயற்கை மக்கள் தொகை சரிவை ஜப்பான் பதிவு செய்துள்ளது.
மக்கள் தொகை ஆய்வாளர்களின் கணிப்பின்படி, இந்த அளவிலான பிறப்பு சரிவு 2040-களில் மட்டுமே ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துள்ளது. 2060-ஆம் ஆண்டுக்குள் ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 8.7 கோடியாக குறையும் என்றும், அதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 40 சதவீதம் இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு குறைந்த வேலைவாய்ப்பு பாதுகாப்பு, உயர்ந்த வாழ்க்கைச் செலவு, குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவு, திருமணத்தை தாமதப்படுத்தும் போக்கு மற்றும் பெண்களுக்கு சவாலாக இருக்கும் பணியிடச் சூழல் ஆகியவை முக்கிய காரணங்களாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, பலர் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பதிலாக மனநிம்மதி மற்றும் துணைக்காக செல்லப்பிராணிகளை வளர்க்கத் தொடங்கியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

