International
oi-Hema Vandhana
குவைத் நகரம்: வளைகுடா நாடான குவைத்தில் தமிழ்நாட்டு மானம் கப்பலேறியுள்ளது.. வேலை தேடி சென்ற தமிழர்களை குறிவைத்து ஒரு ஜோடி அநியாயமாக வட்டி வசூலித்துள்ளது.. அதிக வட்டிக்கு கடன் வழங்கி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்த தம்பதியை அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்போம்.
குவைத்தின் மன்கப் பகுதியில் உள்ள பிளாக்-3 என்ற அட்ரஸில் வசித்து வருகிறார்கள் அந்த தமிழகத் தம்பதியினர்.. இவர்கள் பிழைப்புக்காக குவைத் சென்றுள்ள தமிழர்களை இலக்காகக் கொண்டு, நீண்டகாலமாகவே மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதிக வட்டி வசூலித்த தம்பதி
அதுமட்டுமல்லாமல், அவசர தேவைக்காக நாடி வருபவர்களுக்கு பல மடங்கு வட்டிக்குக் கடன் வழங்கிவிட்டு, அதற்குரிய பணத்தை தராதவர்களை அச்சுறுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்களின் முழுப்பெயர் மற்றும் வயது விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
பாதுகாப்பிற்காக பலரிடமிருந்தும் சட்டவிரோதமாக பெறப்பட்ட 24 பாஸ்போர்ட்டுகளை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
24 பாஸ்போர்ட்கள்
குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் வட்டித் தொழில் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையும் மீறிப் பல ஆண்டுகளாகவே இவர்கள் விசா வழங்கல் மற்றும் வட்டித் தொழிலைச் சட்டவிரோதமாகச் செய்து வந்துள்ளனர். கடன் கொடுத்ததற்கான உத்தரவாதமாக அப்பாவிகளின் பாஸ்போர்ட்டுகளைப் பறித்துத் தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத செயல்கள் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்தான் பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டு, இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் குவைத்தில் செயல்படும் போலி ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களின் முறையற்ற செயல்பாடுகளுக்கு எதிராக, உரிமம் பெற்ற நிறுவனங்கள் இந்தியத் தூதரகம் மற்றும் குவைத் குற்றப் புலனாய்வு துறையிடம் முறையான புகார்களை அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம்
இப்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதி மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்தின் நற்பெயரையும் பாதிக்கும் என்பதால், வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் நேரடியாகத் தூதரகத்தை அணுகுவதே சரியான வழியாகும். இந்தத் தம்பதியின் கைது நடவடிக்கை இப்போது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
வீட்டு வேலைக்கு ஆள்சேர்ப்பு
இப்படித்தான், கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட குவைத்தில் செயல்படும் சட்டவிரோத வீட்டு வேலை ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களுக்கு எதிராக, குவைட்டிலுள்ள உரிமம் பெற்ற ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்தியத் தூதரகம், குவைத் சுகாதார அமைச்சகம் மற்றும் குவைத் குற்றப் புலனாய்வுத்துறை போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகளிடம் எழுத்துப்பூர்வ புகார்களைத் தாக்கல் செய்திருந்தனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

