கேரளம்: பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு; அதிகாரிகள் காரை உடைத்து நொறுக்கிய சிபிஎம் நிர்வாகிகள்!

Spread the love

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகளின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி சம்பந்தப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள வீடு, பினராயி விஜயனின் மருமகனும் பேப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸின் கோழிக்கோடு கோட்டூளியில் உள்ள வீடு, சி.எம்.ஆர்.எல் மேலாண்மை இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் கொச்சியில் உள்ள வீடு, ஆலுவாவில் உள்ள சி.எம்.ஆர்.எல் அலுவலகம், பெங்களூருவில் உள்ள எக்ஸாலாஜிக் அலுவலகம் மற்றும் சசிதரன் கர்த்தாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு இடங்கள் உட்பட மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடந்தது. சுமார் 8 மணி நேரம் சோதனை மற்றும் வாக்குமூலம் பதிவு ஆகியவற்றை முடித்துக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்தச் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறை ரெய்டு

திருவனந்தபுரம் பேக்கரி ஜங்சனில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் சோதனை முடிந்து திரும்பிய அதிகாரிகளின் வாகனக் கண்ணாடியை சி.பி.எம் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். வாகனத்தை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் முயன்ற நிலையிலும் அதிகாரிகள் வாகனங்கள் மீது தாக்குதல் நிகழ்ந்தது. அதிகாரிகள் பயணித்த கார்கள் மீது கற்களையும், காலணிகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். ​திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டின் முன்பும், கண்ணூரில் உள்ள வீட்டின் முன்பும் சி.பி.எம் தொண்டர்கள் அமலாக்கத்துறைக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர். கேரள முதல்வர் வி.டி.சதீசன் உள்ளிட்டோரின் ஃப்ளெக்ஸ் போர்டுகளை சி.பி.எம் தொண்டர்கள் சேதப்படுத்தினர். முதல்வர் வி.டி.சதீசன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அடுத்த நாளே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், இது பா.ஜ.க – காங்கிரஸ் இடையேயான ரகசியக் கூட்டு என்றும் சி.பி.எம் குற்றம் சாட்டியுள்ளது.

பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடத்திவிட்டு வெளியேறிய அமலாக்கத்துறை அதிகாரிகளின் கார் உடைப்பு

ரெய்டு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளீதரன் கூறுகையில், “இ.டி-யின் அனைத்து விஷயங்களிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் ரெய்டில் ஏதாவது விஷயங்கள் வெளியே வரட்டும். எங்களுக்கும் அமலாக்கத்துறைக்கும் எந்த நட்பும் இல்லை. அமலாக்கத்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் ஒருவேளை தலைமை செயலகத்துக்கு ரெய்டுக்கு வந்தாலும், வருவார்கள். அமலாக்கத்துறை விசாரணையை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீதான பாசத்தால் சி.பி.எம் கட்சியினர் தெருவில் இறங்கி போராடவில்லை. இப்போது எல்லா துறைகளும் எங்களிடம் இருப்பதால் அவர்கள் கேரள அரசுக்கு சொந்தமான பொருட்களையும், நிறுவனங்களையும் சேதப்படுத்தும் நோக்கத்தில் கல்லெறிகிறார்கள். அது சரியான நடவடிக்கை அல்ல. முதல்வர் வி.டி.சதீசன் பிரதமரை சந்தித்ததற்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை. கேரளத்தின் வளர்ச்சிக்காக சந்தித்துள்ளார். இதற்கு முன்பும் பினராயி விஜயன் பிரதமரை சந்தித்துள்ளார். அதற்கு தவறான விளக்கம் கொடுக்கவேண்டாம்” என்றார். இது குறித்து உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “இந்த ரெய்டு சம்பந்தமாக கேரள போலீஸுக்கோ, உள்துறைக்கோ தெரியாது. எங்களிடம் அறிவிக்கவில்லை. போலீஸ் உதவியை அவர்கள் கேட்கவும் இல்லை. என்ன சம்பவம் என எங்களுக்கு தெரியவில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *