ஸ்டேஷனில் 8 மணி நேரம்; மருத்துவமனையில் 10 மணி நேரம் – பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமி அலைக்கழிப்பு

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம், பீட் என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவர் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண்ணை கை, கால்களை கட்டிவிட்டு, கர்ச்சீப்பால் வாயை அடைத்துவிட்டு அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு அவரின் உறவினர்கள் மாலையில் காவல் நிலையத்திற்கு புகார் செய்யச் சென்றனர். போலீஸார் மைனர் பெண்ணையும், உறவினர்களையும் சிறிது நேரம் இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் பல மணி நேரம் ஆன பிறகும் புகாரை போலீஸார் பதிவு செய்யவில்லை. இரவு முழுவதும் அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் காத்துக் கிடந்தனர். அதிகாலை 5 மணிக்குத்தான் அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இதற்காக அவர்கள் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அப்பெண்ணை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அப்பெண் தனது குடும்பத்தோடு சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்ய பெண் டாக்டர் இல்லை. அப்பெண் தனது பெற்றோருடன் பல மணி நேரம் காத்துக்கிடந்தார். டாக்டர் வருவதற்கான அறிகுறி இல்லை. இதனால் அப்பெண் வீட்டுக்கு செல்வதும், வந்து விசாரிப்பதுமாக இருந்தார். காலை 11 மணிக்கு அப்பெண் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் இரவு 9 மணிக்குத்தான் பெண் டாக்டர் மருத்துவமனைக்கு வந்து அப்பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்தார். அதாவது 10 மணி நேரம் மருத்துவ பரிசோதனைக்காக காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசு நிர்வாகம் இப்படி அலட்சியமாகச் செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *