கேரள முதல்வர் யார்? – முக்கோண மோதலில் காங்கிரஸ்!

Spread the love

கேரளத்தில் 102 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றும் முதல்வராக யாரை நியமிப்பது என காங்கிரஸ் தலைமை திணறிவருகிறது!

கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில், 102 தொகுதிகளை வாரிச்சுருட்டியது காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி. தேர்தல் அறிவித்ததிலிருந்தே ‘முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற விவாதம் எழுந்தது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணுவதற்குள் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரை முன்னிறுத்தி அவர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சர்ச்சையைக் கிளப்பிவந்தனர். இதற்கிடையே தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியான நிலையில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறிவருகிறது காங்கிரஸ் தேசியத் தலைமை. மே 10-ம் தேதி முதல்வர் பதவி ஏற்பு விழா நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், முதல்வர் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் கேரள மாநில தலைவர் சன்னி ஜோசப்

காங்கிரஸ் கேரள மாநில தலைவர் சன்னி ஜோசப்

இது குறித்து காங்கிரஸ் விவரப்புள்ளிகள் கூறுகையில், “யு.டி.எஃப் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்ற 63 எம்.எல்.ஏ-க்களில், 50 பேர் கே.சி.வேணுகோபாலை முதல்வராக்க ஆதரவாக இருக்கின்றனர். அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளாக சி.பி.எம் அரசுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனை முதல்வராக்க வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சியில் சீனியாரிட்டி அடிப்படையில் ரமேஷ் சென்னிதலாவை முதல்வராக்க வேண்டும் என மாநில நிர்வாகிகள் கூறிவருகின்றனர். இந்த முக்கோண மோதலில் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன் ஆகிய இரண்டு அகில இந்திய நிர்வாகிகளைக் கேரளாவுக்கு அனுப்பி, கருத்து கேட்டு வருமாறு அறிவித்தது டெல்லி தலைமை. அவர்கள் கருத்து கேட்டுவிட்டு, கடந்த 7-ம் தேதி டெல்லிக்குச் சென்றுவிட்டனர். இனி முதல்வர் சீட்டுக்கு அடிபோடும் மூவரையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி தேசியத் தலைமை இறுதி முடிவு எடுக்கும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *