இந்தக் கேலிச்சித்திரம் வெளியான உடனே இணையவாசிகள் மற்றும் இந்தியத் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதற்கு மிக முக்கியக் காரணம், ‘பாம்பாட்டி’ என்ற குறியீட்டிற்குப் பின்னால் இருக்கும் மேற்கத்திய நாடுகளின் பழைமைவாத, இனவெறி சார்ந்த பார்வையாகும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தியாவை ஏழைகள் வாழும், மூடநம்பிக்கைகள் நிறைந்த, பாம்பாட்டிகளும் புனித யானைகளும் மட்டுமே நடமாடும் ஒரு பின்தங்கிய நாடாகக் காட்டுவதை, மேற்கத்திய ஊடகங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
தற்கால நவீன உலகில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா உலகிற்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்த பிறகும், இத்தகைய பழமையான குறியீடுகளைப் பயன்படுத்துவது திட்டமிட்ட அந்நியர் வெறுப்பு மற்றும் இனவெறியின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் பலரும் சுட்டிக்காட்டினர்.

இதற்கு முன்பும் அக்டோபர் 2022-ல் ஸ்பெயின் நாட்டின் ‘லா வாங்குவார்டியா’ நாளிதழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதும்போது இதேபோன்ற பாம்பாட்டிப் படத்தை வெளியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானது. 2014-ல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. அப்போது அதற்குப் பதிலடி கொடுத்த மோடி, “இந்தியா இப்போது பாம்புகளை வைத்து வித்தை காட்டவில்லை, கணினி மவுஸைக் கொண்டு உலகையே மாயாஜாலம் செய்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.