
சென்னை மாநகராட்சியில், 383 ‘அம்மா’ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இந்த உணவகங்களில், காலையில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல்; மதியம் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம்; இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
‘அம்மா’ உணவகங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும், ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக சமையல் கேஸ் தட்டுப்பாடு காரணமாக, அம்மா உணவகங்களின் செயல்பாடுகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி சில அம்மா உணவகங்களில், விறகு அடுப்புகள் பயன்படுத்தப்பட்டன.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக காலையில் பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவு தக்காளி சாதம் ஆகியவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இட்லி, சாம்பார் சாதம், சப்பாத்தி ஆகியவை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை அம்மா உணவகங்களுக்கு நாள்தோறும் 300 சிலிண்டர் தேவைப்படும் நிலையில், 150 சிலிண்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.
இதே போன்று தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர்களில் பாதி அளவே கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இட்லி, சப்பாத்தி, சம்பார் சாதம் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.