சென்னை கொளத்தூர் தொகுதியில் இவிஎம் மிஷின்களை ஆய்வு செய்த பொழுது பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர்என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையையும் Symbol Loading Unit கருவிகளின் செயல்பாட்டையும் சரிபார்க்கக் கோரலாம்.
திமுக சட்டத்துறையின் சார்பில் கழகத் தலைவரின் அனுமதியைப் பெற்று, தமிழ்நாட்டில் கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் உட்பட மொத்தம் 5 தொகுதிகளில் இந்தச் சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள விண்ணப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கடந்த 29-ம் தேதி முதல் கொளத்தூர் தொகுதிக்கான சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல. இயந்திரங்களின் தொழில்நுட்பத்தின் சரியான தன்மையை உறுதி செய்யும் நடைமுறையாகும். கொளத்தூரில் உள்ள 157-வது பூத்தில் வெரிஃபை பண்ணுவதற்கு மெஷின்களை எல்லாம் எடுத்து வந்து வைத்தார்கள்.
ஒரு கண்ட்ரோல் யூனிட் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களான 3 பேலட் யூனிட்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொளத்தூரில் 36 வேட்பாளர்கள் நின்றார்கள். அதனால் ஓட்டு பட்டனை அழுத்தும் மெஷின் மூன்று வைத்திருந்தார்கள். அந்த மூன்று மிஷின்கள், கண்ட்ரோல் யூனிட் என மொத்தம் நான்கு மெஷின்களிலும் அட்ரஸ் டேக் புதிதாக இருந்தது.