மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நகரத்தில் நல்ல ஒரு கம்பெனியில் வேலையில் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பதில்லை. இதைப் பயன்படுத்தி திருமண புரோக்கர்கள் ஆண்களிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து கொடுப்பதாகக் கூறி பல லட்சங்களைப் பறித்துவிடுகின்றனர்.
இதுபோன்ற ஆண்களை திருமணம் செய்து ஒரு பெண் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உமாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் என்ற வாலிபர் சமீபத்தில் புரோக்கர்கள் ஏற்பாட்டில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார்.
இதற்காக புரோக்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருந்தார்.
ஆனால் திருமணமான சில மாதங்களில் மணப்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. திடீரென அப்பெண் தனது கணவர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சஞ்சய் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பெண் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அப்பெண்ணிடம் விசாரித்த போது அவர் ஏற்கனவே மேலும் 8 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது.
அப்பெண்ணோடு சேர்ந்து ஏராளமான திருமண புரோக்கர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களையும் போலீஸார் தேடி வருகின்ற்னர்.