கோட்டைக்குள் புதைந்திருக்கும் நள மகராஜாவின் பொக்கிஷம்? 20 அடி சுரங்கம்..மாயமான பீரங்கி! ஒரே குழப்பம் | Narwar Fort Mystery: Missing Cannon, Secret Tunnel and Hidden Treasure Rumours

Spread the love

India

oi-Rajkumar R

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நர்வார் கோட்டையில் கடந்த சில மாதங்களாகவே மர்மமான முறையில் சில சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோட்டையில் மிகப்பெரிய புதையல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மர்ம நபர்கள் சிலர் 20 அடி ஆழத்துக்கு ரகசிய சுரங்கம் தோண்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது அந்த கோட்டையில் இருந்த சுமார் 1 டன் எடையுள்ள பழமையான பீரங்கியையே திருடி சென்றிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

புகழ்பெற்ற நர்வார் கோட்டை மத்திய பிரதேச மாநிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு சுற்றுலா தளமாக கருதப்படுகிறது. மேலும் அங்கு சிறப்புமிக்க பீரங்கி ஒன்றும் இருந்தது. சுமார் ஒரு டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆங்கிலேயருக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சுமார் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், விந்திய மலைத்தொடரின் மீது அமைந்துள்ள நர்வார் கோட்டை, சுற்றியுள்ள சமவெளியில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. தற்போது இந்த கோட்டை தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Fort Tunnel Treasure

நர்வார் கோட்டை

இந்த நிலையில் அந்த கோட்டையில் இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட பிரம்மாண்ட பீரங்கி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த பீரங்கியை சாதாரணமாக திருடர்கள் எடுத்துச் சென்றிருக்க முடியாது என்றும், ஒரு டன் எடை கொண்ட பீரங்கி எடுத்துச் செல்ல, கனராக இயந்திரங்கள், முன்கூட்டியே திட்டமிட்ட பிளான் மற்றும் பெரிய வாகனங்கள் தேவை என்பதால் இந்த கும்பல் பல நாட்கள் திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மாயமான பீரங்கி

இந்த நிலையில் தற்போது பீரங்கி திருட்டுக்கு என சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது அந்த பீரங்கி அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களின் கலவையால் உருவாக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரவி இருக்கிறது. அஷ்ட தாது என்பது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலகங்களின் கலவை என சொல்லப்படுகிறது. பழங்கால கோயில் சிலைகள் மற்றும் சில அரச குடும்பங்களின் ஆயுதங்கள் இந்த உலோக கலவையால் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அஷ்ட தாது கலவை

இந்த நம்பிக்கையின் காரணமாக சுமார் 1 டன் எடை கொண்ட பீரங்கியில் ஏராளமான தங்கம் இருக்கலாம் என அந்த திருட்டு கும்பல் கருதி இருக்கலாம் எனவும், அதனால் அந்த பீரங்கியை கடத்தி இருக்கலாம் என சொல்கின்றனர். அதே நேரத்தில் அஷ்ட தாது கலவையில் தங்கம் இருந்தாலும் அது பொதுவாக 0.2 சதவீதம் அளவே இருக்கும் எனவும், இந்தியாவில் உள்ள பழமையான பீரங்கிகள் வெண்கலம் அல்லது இரும்பில்தான் செய்யப்பட்டவை. அவற்றில் மீட்டெடுக்க கூடிய அளவில் தங்கமே இல்லை என உலோகவியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

ரகசிய சுரங்கம்

இந்த பீரங்கி திருட்டுக்கு முன்பாகவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் நர்வார் கோட்டையில் மற்றொரு மர்ம சம்பவம் நடந்தது. கோட்டைக்குள் உள்ள மா பாசர் தேவி கோயிலின் பின்புறத்தில், மர்ம நபர்கள் சுமார் 20 அடி ஆழத்தில் ரகசிய சுரங்கம் தோண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கம் வெளியில் தெரியாத வகையில் புதர்களால் மறைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் கடப்பாரை, மண்வெட்டி, ஸ்ப்ரே கேன்கள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

நள மகாராஜா

இதனால், புதையல் தேடியவர்கள் பல நாட்கள் கோட்டைக்குள்ளேயே தங்கி, பெரும்பாலும் இரவு நேரங்களில் தோண்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த பகுதி மக்களிடையே பல நூற்றாண்டுகளாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. மன்னர் நளனின் கருவூலம், மா பாசர் தேவி கோயிலின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதனால் தான் அங்கு புதையில் தேடுபவர்கள் குவிந்து வருவதாக சொல்கின்றனர்.

புதையல்

அதுமட்டுமில்லாமல் கோவிலின் அருகே இருக்கும் ஒரு சிறிய துவாரத்தில் நாணயங்களை போட்டால் உலோக சத்தம் கேட்கும் என்பதும் அந்த இடத்தில் பெரிய புதையல் மறைந்திருக்கிறது என்பது பல ஆண்டுகளாக உள்ளூரில் கட்டுக்கதைகளாக பரவி இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது அங்கு புதையல் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆனால் பீரங்கி மாயமானது மற்றும் சுரங்கம் தோண்டிய சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

போலீசார் விசாரணை

கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும், பல்வேறு பாதைகள் இருப்பதும் இந்த வழக்கின் விசாரணையை முடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பீரங்கி திருட்டில் ஈடுபட்டதும், புதையல் தேடி வந்ததும் ஒரே கும்பலா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *