கோர்ட்டில் விவாகத்து ஆவணங்களை கிழித்துபோட்டு ஓடிச்சென்று கணவனை கட்டிப்பிடித்து ஒன்று சேர்ந்த பெண் \ Woman tears up marriage papers in court, runs away, hugs husband

Spread the love

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

ஷிகா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணைக்காக இருவரும் பல ஆண்டுகளாக கோர்ட்டிற்கு அலைந்தனர். இதனால் ஷிகாவிற்கு மனஅழுத்தம், உடல் நலப்பிரச்னை மற்றும் பணப்பிரச்னை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ஷிகாவிற்கு அவரது தந்தை முழு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் இருந்த சேமிப்பும் குறைந்து கொண்டே வந்தது. மகளின் எதிர்காலத்தை நினைத்து நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த ஷிகாவின் தந்தைக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பல பிரச்னைகளால் அவரை ஷிகாவின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து செளரப்பிற்கு தெரிய வந்தது. உடனே அவர் ஓடி வந்து ஷிகாவின் தந்தையை குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தார்.

இதில் ஷிகாவின் தந்தை குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் ஷிகாவின் தந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அடுத்த நாளே ஷிகாவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இதில் இரண்டு பேரும் ஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். அந்நேரம் செளரப்பிடம் இன்னும் விவாகரத்து வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார். உடனே செளரப் தனக்கு எதிர்திசையில் நின்று கொண்டிருந்த ஷிகாவைப் பார்த்து லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு இத்தனை ஆண்டுகளாக செளரப் மீது இருந்த வெறுப்பைக் கரைய வைத்தது.

ஷிகா தன்னிடம் இருந்த விவாகரத்து ஆவணங்களை கோர்ட் அறைக்குள் கிழித்துப்போட்டார். அவர் நேராக தனது கணவரிடம் ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். இருவரும் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். இதனால் கோர்ட்டில் ஒரே அமைதி நிலவியது.

இருவரும் திடீரென ஒன்று சேர்ந்தது கோர்ட்டில் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் மீதுதான் தவறு இருப்பதாகச் சொல்லிக்கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *